ரயில் பயணியிடம் திருட முயன்றதாக கைது செய்யப்பட்ட அரசு பள்ளித் தலைமை ஆசிரியர் விரைவில் பணியிடைநீக்கம் செய்யப்படுவார் என்று ஈரோடு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஆறுமுகம் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம், கோபி கொல்லாங்காட்டைச் சேர்ந்தவர் சந்திரன் (40). அந்தியூர் தாலுகா, செம்புளிச்சாம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர். சேலம் ரயில் நிலையத்தில், ரயில் பயணியிடம் நகை, ரொக்கம் உள்ளிட்டவற்றைத் திருட முயன்றதாக, இவரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.
சந்திரனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 2 ரயில் பயணிகளிடம் 6.5 பவுன் தங்க நகைகளைத் திருடியது தெரியவந்தது. இதுகுறித்து, ஈரோடு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஆறுமுகம் கூறுகையில், சந்திரன் கைது செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஆனால், எங்களுக்கு முதல் தகவல் அறிக்கை நகல் இதுவரை கிடைக்கவில்லை. கைது நடவடிக்கையில் இருந்து 48 மணி நேரத்துக்குள் எங்களுக்கு முதல் தகவல் அறிக்கை, அதன் மீதான நடவடிக்கையைத் தெரிவிக்க வேண்டும். அந்த அறிக்கை நகல் கிடைத்தவுடன், கல்வித் துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பணியிடை நீக்கம் செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.