கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 10 பேர், செவ்வாய்க்கிழமை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
ராமேசுவரத்திலிருந்து திங்கள்கிழமை 500க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இவர்கள் செவ்வாய்க்கிழமை கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது தங்கச்சிமடம் ராஜா நகரை சேர்ந்த ரெஜில் மகன் ஹான்ஸ் என்பவரது படகு பழுதாகியுள்ளது. இதையடுத்து அப்படகை ராமேசுவரத்துக்கு கட்டி இழுத்து வர முயற்சித்துள்ளனர்.
அப்போது, அவ்வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ஹான்ஸின் படகில் இருந்த ராமேசுவரத்தை சேர்ந்த முத்து முருகன் (27), செல்வம் (30), ராஜூ (45), அருண் (28), முனியசாமி (30), மூக்கையூரை சேர்ந்த கிளாரன் (29), கரையூரை சேர்ந்த அந்தோணி எடிசன் (26), தங்கச்சி மடத்தைச் சேர்ந்த அத்துராஜ் (52), அருண் ஜார்ஜ் (28), பார்த்திபனூரை சேர்ந்த அர்ச்சுனன் (45) ஆகிய 10 பேரையும் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகவும், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்ததாகவும் கூறி பிடித்துச் சென்றனர்.
பின்னர், இவர்கள் அனைவரையும் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் நீதிபதி எம்.எம்.ரியால் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இவர்களை பிப்ரவரி 21 வரை சிறைக்காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, 10 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.