22 எம்.எல்.ஏ.,க்களுடன் பேச்சுவார்த்தை: களமிறங்கிய ஓ.பி.எஸ்., நத்தம் மகன்கள்

அதிமுகவைச் சேர்ந்த 22 எம்.எல்.ஏ.,க்களுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் சார்பில் பேசப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுகவைச் சேர்ந்த 22 எம்.எல்.ஏ.,க்களுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் சார்பில் பேசப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால், மகாபலிபுரத்தில் விடுதியில் தங்கியுள்ள சட்டப் பேரவை உறுப்பினர்களின் செல்லிடப்பேசி எண்கள், பேச்சுகள் உள்ளிட்ட அனைத்தும் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
அதிமுக பொதுச் செயலர் வி.கே. சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் சட்டப் பேரவை உறுப்பினர்கள் 127 பேர் பேருந்து மூலமாக, மகாபலிபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தரப்பினர் தொடர்பு கொள்ளாமல் இருக்க, கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு சில வாரங்களாக...: முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சசிகலா தரப்பில் இருந்து நெருக்கடி அதிகரித்ததாகவும், இதைத் தொடர்ந்து அவர் கட்சியை உடைக்கும் வேலையை கடந்த சில வாரங்களில் இருந்தே தொடங்கியதாகவும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. மூத்த நிர்வாகிகள் யார் யாரெல்லாம் சசிகலாவுக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதை அறிந்து அவர்கள் மூலமாக முதலில் எதிர்ப்பு அலைகளை உருவாக்கினார் எனவும் தெரிவிக்கின்றன.
இதன் ஒருகட்டமாக, சட்டப் பேரவை முன்னாள் தலைவர் பி.எச்.பாண்டியன், முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த அதிரடித் தகவல்களை வெளியிட்டார். அவர் பேட்டி அளித்த அன்றைய தினத்தின் இரவே முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்தப் பணிகள் அனைத்தும் ஒரு நாள், இரண்டு நாள்களில் நடைபெறவில்லை எனவும், கடந்த சில வாரங்களாக நன்கு திட்டமிடப்பட்டு செய்யப்பட்டதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
களம் இறங்கிய தனயன்கள்: சசிகலாவுக்கு எந்தெந்த எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பாக இருக்கிறார்கள் என்பது குறித்த தகவல்கள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மூலமாக எடுக்கப்பட்டன. அதில், சுமார் 22 சட்டப் பேரவை உறுப்பினர்கள் வரை சசிகலாவுக்கு எதிரான மனநிலையில் இருப்பதாகத் தெரிய வந்தது.
இந்த உறுப்பினர்கள் அனைவரிடமும் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் மகன் ஆகியோர் செல்லிடப்பேசி மூலமாகப் பேசியுள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தை விவரங்களை போயஸ் கார்டன் தரப்பு உன்னிப்புடன் கவனித்து வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, திமுக தரப்பினரும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை அணுக முயற்சித்துள்ளது.
மேலும், சட்டப் பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகனின் பேச்சு, முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அணுகுமுறை ஆகியவற்றையும் போயஸ் கார்டன் தரப்பு முற்றுலுமாக ரசிக்கவில்லை. இவற்றுக்கெல்லாம் ஒரு "செக்' வைக்கும் வகையில், நானே முதல்வர் என்ற அஸ்திரத்தை சசிகலா திடீரென எடுத்தார். இதனால், ஆடிப்போன ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தாமதமாகச் செய்யலாம் என்றிருந்த கட்சி உடைப்பு வேலையை இப்போது உடனடியாகத் தொடங்கியுள்ளதாக அதிமுக தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
ஐவர் அணியால் வந்தது...: முதல்வர் ஜெயலலிதா உடல் நலன் குன்றத் தொடங்கிய காலத்தில் அரசு, கட்சிப் பணிகளை கவனிக்க ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் தலைமையில் ஐவர் அணி அமைக்கப்பட்டது. இந்த ஐவர் அணியில் ஓ.பி.எஸ்., நத்தம் விஸ்வநாதனின் பங்கு முக்கியமானது. அந்த காலகட்டத்தில்தான் இருவரும் அதிமுகவிலும், அரசு வட்டாரத்திலும் மிகவும் சக்தி வாய்ந்த புள்ளிகளாக மாறினர்.
இதைத் தொடர்ந்தே கட்சியிலும், அரசாங்கத்திலும் தங்களுக்கென்ற ஒரு வளையத்தை உருவாக்கத் தொடங்கினர். அப்போது, முதல்வர் ஜெயலலிதாவின் படத்தைப் போட்டு அதற்கு எதிரே சிறியதாக ஓ.பி.எஸ்., படத்தையும் அச்சிட்டு அடையாள அட்டைகள் தயாரிக்கப்பட்டன. இதற்கு முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், ஐவர் அணி சக்தி வாய்ந்ததாக மாறி வருவதை அறிந்து அதையும் கலைத்தார் ஜெயலலிதா.
இப்போது அந்த ஐவர் அணியில் சக்தி வாய்ந்தவர்களாக விளங்கிய ஓ.பி.எஸ்., நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் புதிய அணியை தங்களது தலைமையில் உருவாக்கி அதிமுக தலைமைக்கு நெருக்கடியைக் கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து, மூத்த அமைச்சர் ஒருவர் கூறுகையில், முதல்வரும், முன்னாள் அமைச்சரும் உருவாக்கியுள்ள இந்த அணியால் கட்சிக்கு மிகப்பெரிய சிக்கல் என்பதை மறுக்க முடியாது. ஆனால், இந்தச் சிக்கலுக்கு விரைவில் விடை கிடைக்கும். அவர்கள் என்ன நினைத்தார்களோ அதனை அடைய முடியாது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com