சட்டமன்ற உறுப்பினர்களுக்கான விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் உள்ளனர் என தமிழக அரசு வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைப்பிடிக்கப்பட்டுள்ள அதிமுக பேரவை உறுப்பினர்கள் 130 பேரை மீட்க உத்தரவிட வேண்டும் என்றும், இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கவுலிடம் நேரில் முறையிட்டார். அப்போது, இதனை மனுவாகத் தாக்கல் செய்யுங்கள் என்று நீதிபதி அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து டிராபிக் ராமசாமி மனுத்தாக்கல் செய்தார்.
இதையடுத்து இன்று இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. விசாரணையின்போது அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான விடுதியில் அவர்கள் அனைவரும் சுதந்திரமாக உள்ளனர் என்று அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் பேட்டையில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான நட்சத்திர விடுதியில் அதிமுக பேரவை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சில உறுப்பினர்கள் மற்றொரு தனியார் நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நட்சத்திர விடுதி அருகே 500 மீட்டர் முன்பாகவே பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதல்வர் பன்னீர்செல்வம் தரப்புக்கு ஆதரவாக எந்த அதிமுக பேரவை உறுப்பினர்களும் சென்று விடாமல் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.