சென்னையில் அதிமுக நிர்வாகிகள் வீடுகள், அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த விவரம்:
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அதிமுக பொதுச் செயலர் வி.கே.சசிகலாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதன் விளைவாக கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளது. இதனால் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படாமல் இருக்க, காவல் துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள அதிமுக மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள், வட்டச் செயலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு புதன்கிழமை போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் வீடுகள், அலுவலங்களுக்கு பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது.
முதல்வர் வீடு: சென்னை கீரின்வேஸ் சாலையில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு வழக்கத்தைவிட அதிக அளவில் போலீஸார் புதன்கிழமை குவிக்கப்பட்டனர். அதேபோல போயஸ் தோட்டத்தில் உள்ள அதிமுக பொதுச் செயலர் வி.கே.சசிகலா இல்லம் அமைந்துள்ள பகுதியிலும், அதிக அளவில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ராயப்பேட்டையில் அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்திலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.