ஆளுநர் தீவிர கவனம் செலுத்த வேண்டும்
தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து ஆளுநர் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று தமாகா உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கூறி வந்த நிலையில், தற்போது முதல்வர் பன்னீர்செல்வம் நீதி விசாரணை நடத்தப்படும் என அறிவித்துள்ளது காலம் கடந்த முடிவு என்றாலும் வரவேற்கத்தக்கது.
பன்னீர்செல்வம் தனது பதவி விலகல் குறித்து கூறியுள்ள கருத்துகளுக்கு, அதிமுக தலைமைதான் அதிகாரப்பூர்வமாக பதில் அளிக்க வேண்டும். திமுக மீது சசிகலா குற்றம் சாட்டுவது சரியல்ல. எதிர்கட்சியின் கடமையை திமுக சரியாகச் செய்து வருகிறது. ஜெயலலிதாவை நம்பிதான் தமிழக மக்கள் வாக்களித்தனர். தற்போது அங்கு கட்சிக்கும், ஆட்சிக்கும் இடையே நடந்து வரும் வேறுபாடுகளைப் பார்த்து மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர் என்றார் வாசன்.