ஈரான் நாட்டு சிறையிலிருக்கும் 15 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி, ராமநாதபுரத்தில் புதன்கிழமை பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் பேரணியும், ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
ராமநாதபுரம் பாரதிநகர் பகுதியில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யூ. மாநில பொதுச் செயலர் ஜி.சுகுமாறன் தலைமை வகித்தார். இதனைத் தொடர்ந்து அங்கிருந்து பேரணி தொடங்கியது. பேரணிக்கு தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலர் எம்.கருணாமூர்த்தி தலைமை வகித்தார்.
சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலர்கள் ஹெச்.ஜான் சௌந்தர்ராஜ், மாவட்டச் செயலர் எம்.சிவாஜி, மாவட்டப் பொருளாளர் எம்.சந்தானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில், மீன்பிடி தொழிற்சங்க நிர்வாகிகள், ஈரான் சிறையிலிருக்கும் மீனவர்களின் கிராமங்களைச் சேர்ந்த தலைவர்கள், மீனவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜனை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.