கப்பலிலிருந்து வெளியேறிய எண்ணெய் படலத்தை அகற்றும் பணி கடந்த 12 நாள்களுக்குப் பிறகு புதன்கிழமை நிறைவடைந்துள்ளது. எனினும், பாறைகளில் சிதறியுள்ள எண்ணெய்க் கழிவுகளை தூய்மைப்படுத்தும் பணி தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே கடந்த மாதம் 28 -ஆம் தேதி (ஜன.28) எம்.டி. மாபில் என்ற கப்பல் மோதியதில், எம்.டி.டான் காஞ்சிபுரம் என்ற சரக்கு கப்பல் சேதமடைந்தது.
அதிலிருந்து வெளியேறிய எண்ணெய்க் கழிவுகள் எர்ணாவூர் பாரதியார் நகர் கடற்கரை அருகே படலமாகத் தேங்கியது.
இந்நிலையில், இதனை அகற்றும் பணி கடலோரக் காவல்படையினர் தலைமையில் கடந்த 29 -ஆம் தேதி தொடங்கியது.
இப்பணியில் சென்னை, எண்ணூர் துறைமுகங்களின் ஊழியர்கள், தீயணைப்புத் துறை வீரர்கள், சென்னை மாநகராட்சி, கழிவு நீர் அகற்றல் வாரிய ஊழியர்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
இதுவரை சுமார் 300 டன் வரை எண்ணெய்க் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அகற்றப்பட்ட எண்ணெய் கழிவுகள் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் சேமிக்கப்பட்டுள்ளது.
இவற்றை உயிரி தொழில்நுட்பம் மூலம் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாதவகையில் அழிக்கும் பணியை இந்தியன் ஆயில் நிறுவன ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு துறை விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர்.