காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகேயுள்ள ஏ.புனவாசல் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரரின் உடல் புதன்கிழமை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
இக்கிராமத்தை சேர்ந்தவர் திருக்கண்ணன் மகன் திருப்பாண்டி (33). ராணுவ வீரர். காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் பணியாற்றி வந்த இவர், கடந்த 6ஆம் தேதி பணியிலிருந்த போது பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தார். இதையடுத்து திருக்கண்ணனின் உடல் அவரது சொந்த ஊரான ஏ.புனவாசல் கிராமத்துக்கு கொண்டு வரப்பட்டு அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அப்போது ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன், பரமக்குடி சார்- ஆட்சியர் சு.சமீரன், ஏ.டி.எஸ்.பி. இன்பமதி, முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் கேப்டன் விஜயகுமார், கடலாடி வட்டாட்சியர் விஜயகுமார், முன்னாள் அமைச்சர் வ.சத்தியமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. முருகன், திமுக மாவட்டச் செயலர் சுப.த. திவாகரன் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் திருப்பாண்டியின் உடல் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு கோயம்புத்தூர் ராணுவப் படையின் கேப்டன் எஸ்.பி.சிங் தலைமையில் 42 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
ரூ.20 லட்சம் நிதியுதவி: திருப்பாண்டியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வந்த ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் கார்கில் நிவாரண நிதி ரூ.20 லட்சத்திற்கான காசோலையை, தமிழக அரசின் சார்பில் அவரது மனைவி திருக்கண்ணவள்ளியிடம் வழங்கினார்.