கொள்கை அடிப்படையில் ஆதரவு தெரிவித்தோம்

கொள்கை அடிப்படையில் ஆதரவு தெரிவித்தோம்

அரசுக்கு கொள்கை அடிப்படையில் ஆதரவு தெரிவித்தோம் என்று திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

அரசுக்கு கொள்கை அடிப்படையில் ஆதரவு தெரிவித்தோம் என்று திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை கோபாலபுரம் இல்லத்தில் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி:
கேள்வி: பன்னீர்செல்வத்தை பின்னால் இருந்து இயக்குவது திமுகதான் என்று அதிமுக பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா ஒரு கருத்தை தெரிவித்து இருக்கிறார்களே?
பதில்: இதற்கு பதில் சொல்லி, என்னுடைய நேரத்தையும், தரத்தையும் குறைத்துக் கொள்ள நான் விரும்பவில்லை.
கே: பன்னீர்செல்வத்துக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளதா?
ப: முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு நாங்கள் எப்போதும் ஆதரவு தெரிவித்தது இல்லை. பன்னீர்செல்வம் தலைமையில் இருக்கும் அரசுக்கு நாட்டு மக்களின் பிரச்னைகளின் அடிப்படையில், சில கொள்கைகளின் அடிப்படையில், சில சட்ட முன் வடிவுகள் கொண்டு வந்தபோது ஆதரவு தெரிவித்தோம் என்பது மட்டும்தான் உண்மை.
கே: ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் பற்றி நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளாரே?
ப: ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோதே நாங்கள் இது பற்றி கேள்வி எழுப்பினோம்.
அவர் மரணமடைந்த பிறகு மக்களிடத்தில் பலவித சந்தேகங்கள் நிலவி வருகின்றன. எனவே, இது குறித்து விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும் என நாங்கள் தொடர்ந்து சொல்லி வருகிறோம். ஆனால், அப்போதெல்லாம் விசாரணை நடத்தப்படவில்லை.
சட்டப்பேரவையில் இதுபற்றி எங்களுடைய உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியபோது, அது அவைக்குறிப்பிலேயே இருக்கக்கூடாது என நீக்கினார்கள். ஆனால், இப்போது முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அதையே காலம் கடந்து சொல்லி இருந்தாலும், உள்ளபடியே வரவேற்கத்தக்கது. இப்போதாவது விசாரணையை முறையாக நடத்திட வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com