தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேட்டி குறித்து, மதிமுக பொதுச் செயலர் வைகோ கருத்துக் கூற மறுத்துவிட்டார்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் புதன்கிழமை மதுரை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: சீமைக் கருவேல மரங்கள் வருங்காலத்தில் தமிழகத்தை பாலைவனமாக்கக் கூடியது. அதனால், கிணறுகள், குளங்கள் வற்றிவிட்டன. ஆடு, மாடு உள்ளிட்டவைகள் மலடாகின்றன. ஜல்லிக்கட்டுக்கு ஒன்று கூடியதுபோல, இளைஞர்கள் சீமைக் கருவேல மரங்களையும் ஒழிக்க முன்வரவேண்டும். காவிரி பிரச்னையில் நடுவர் நீதிமன்றத் தீர்ப்பை கர்நாடக அரசு ஏற்க மறுப்பது தவறான செயல். காவிரி நீர் பிரச்னையில் நல்ல தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கின்றேன் என்றார்.
அப்போது, தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை இரவு சென்னையில் பேட்டியளித்தது தொடர்பாக கேட்டதற்கு, அவர் கருத்துக் கூற மறுத்துவிட்டு சென்றுவிட்டார். முன்னதாக, மதுரை வந்த வைகோவுக்கு மதிமுகவினர் வரவேற்பளித்தனர்.