தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் எடுத்துள்ள முடிவு துணிச்சலானது என்று, பாஜக மாநில இலக்கிய அணி அமைப்பாளரும், திரைப்பட இசையமைப்பாளருமான கங்கை அமரன் கூறினார்.
பாஜக சார்பில் மத்திய அரசின் ஒருங்கிணைந்த நிதிநிலை அறிக்கை விளக்கக் கூட்டம், திருப்பூரில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற இசையமைப்பாளர் கங்கை அமரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தற்போதைய அரசியல் சூழலில், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பேச்சு மக்களின் மனநிலையை வெளிப்படுத்துகிறது. மக்களிடம் நிலவிய சந்தேகமான விஷயங்கள் பல தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
பன்னீர்செல்வத்தை நீக்கி விட்டு ஆட்சியமைக்கவா சசிகலா உண்மையில் வருகிறார்? வருவாயைத் தக்க வைக்கவே சசிகலா முயல்கிறார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தபோது இரங்கல் கூட்டம் நடத்தி, ஒவ்வோர் ஊரிலும் சசிகலா பேசியிருக்க வேண்டும். அவ்வாறு அவர் செய்யவில்லை.
நாட்டுக்குத் தேவையில்லாத விஷயங்கள் நடைபெறும்போது, அதுகுறித்து இளைஞர் சமுதாயம் கேள்வியெழுப்ப வேண்டும். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தற்போது எடுத்திருப்பது துணிச்சலான முடிவு, பாராட்டுக்குரியது என்றார்.