சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் எங்கு இருக்கின்றனர். அவர்கள் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளார்கள் என்பது வரும் திங்கள்கிழமைக்குள் தமிழக அரசும், தமிழக டிஜிபி மற்றும் மாநகர காவல்துறை ஆணையர் பதலிளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணராயபுரம் தொகுதி பெண் எம்எல்ஏ கீதாவைக் காணவில்லை என அவரது உறவினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். இதே போன்று குன்னம் எம்எல்ஏவைக் காணவில்லை என்று அத்தொகுதி வாக்காளர் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்து மனுக்கள் மீதான விசாரணை இன்று உயர் நீதிமன்றத்தில் தொடங்கியது. அப்போது, கிருஷ்ணராயபுரம் தொகுதி பெண் எம்எல்ஏ கீதா, குன்னம் எம்எல்ஏ ராமச்சந்திரன் ஆகியோரது உறவினர்கள் தொடர்ந்த வழக்கில் அவர்கள் இருவரையும் சேர்த்து மற்ற எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எங்கு இருக்கிறார்கள் என்பது குறித்து வரும் திங்கள்கிழமைக்குள் தமிழக டிஜிபி, மாநகர காவல்துறை ஆணையர் மற்றும் தமிழக அரசு, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போதைய அரசியல் பரபரப்பில் இந்த செய்தியும் பரபரப்பான தகவல்களுக்கு வலுச் சேர்த்துள்ளது.