சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வானதை ஏற்கக் கூடாது என அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் மதுசூதனன் கூறுகையில், அதிமுகவை உருவாக்கிய எம்ஜிஆர், கொடி கட்டும் தொண்டன் தான். கட்சியின் நாடி நரம்பு எல்லாமே அவன்தான். அவன் ஆடினால் ஆட்சியே ஆடும் என்றார்.
அதன்படி அதிமுகவின் பொதுச் செயலாளரை தேர்வு செய்வதற்கென்று தனி விதிமுறைகள் உள்ளன. கட்சியின் தொண்டர்கள் தான் பொதுச் செயலாளரை தேர்வு செய்வார்கள். தற்காலிக பொதுச் செயலாளர் என்ற பதவிக்கே இடம் கிடையாது. அதிமுக சட்ட விதியில் இடமில்லை என்றும் கூறினார்.
மேலும், தொண்டர்களால் தேர்வு செய்யப்படுபவர் மட்டுமே அதிமுக பொதுச்செயலாளராக இருக்க முடியும். கட்சியில் 5 ஆண்டு உறுப்பினராக இருப்பவர்தான் பொதுச்செயலாளர் பதவிக்கு வரமுடியும் என்றும் அந்த அடிப்படையில் பார்த்தால், கட்சி நடவடிக்கைகளுக்கு ஆளாக்கப்பட்ட சசிகலா 2012 மார்ச் 31-ஆம் தேதி சசிகலா மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து கட்சியில் சேர்ந்தார். அவர் அளித்த மன்னிப்பு கடிதத்தில் நான் அரசியலில் ஈடுபட மாட்டேன். அக்காவுக்கு (ஜெயலலிதாவுக்கு) உதவி செய்யவே வந்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
எனவே, சசிகலா பொதுச் செயலாளர் பொறுப்புக்கு தகுதி அற்றவர் என்பதை சுட்டிக் காட்டுகிறேன். அவரது பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதை ஏற்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பி உள்ளேன் என்று கூறினார்.