ஹைதராபாத்: தமிழக அரசியல் சூழலில் மத்திய அரசின் ஆலோசனைப்படிதான் ஆளுநர் நடந்து கொள்ள முடியும் என்று தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் ரோசய்யா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் அரசியல் சூழல் பரபரப்பாகியுள்ள நிலையில் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நடந்து கொள்ளும் முறை பற்றி தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் ரோசய்யா கருத்து தெரிவித்துள்ளார். செய்தியாளரிடம் அவர் கூறியதாவது:
தற்போதுள்ள சூழலில் தனக்கு பெரும்பான்மை பலம் இருப்பதாக சசிகலா கூறுவதை ஆளுநர் அபப்டியே ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தற்பொழுது தமிழகத்தில் நிலவும் அசாதாரணமான சூழ்நிலையில் ஆளுநர் யாரை ஆட்சி அமைக்க அழைக்கப் போகிறார் என்பது முக்கியமாக தில்லியிலிருந்து கிடைக்கக் கூடிய ஆலோசனையை பொறுத்தே அமையும் அவர் என்ன முடிவை வேண்டுமானாலும் அவர் எடுக்கலாம். ஆனால் அதே நேரத்தில் ஆளுநர் தன்னிச்சையாக முடிவு எடுக்க இயலாததால் உண்டாகும் தாமதத்தின் காரணமாக அவர் விமர்சனத்திற்கு உட்படுத்தப்படலாம்.
இவ்வாறு ரோசய்யா தெரிவித்தார்.
முன்னதாக நேற்று சசிகலா மற்றும் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து தங்கள் நிலையை தெளிவுபடுத்தினர்.
அதற்கு பிறகு ஆளுநர் எந்த முடிவையும் உடனடியாக அறிவிக்கவில்லை என்றாலும் மேலும் சில சட்டப்பூர்வமான விளக்கங்களை பெற உத்தேசித்துள்ளதாக தெரிகிறது.