சட்டப்பேரவையில் நம்பிக்கைத் தீர்மானத்தின் போது, ஓ.பன்னீர்செல்வத்தை திமுக ஆதரிக்கும் என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தெரிவித்தார்.
சத்தியமங்கலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஒன்றிய திமுக அலுவலகத் திறப்பு விழாவுக்கு, முன்னாள் ஒன்றியச் செயலாளர் ஏ.கந்தசாமி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திமுக துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஒன்றிய அலுவலகத்தை குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார்.
தொடர்ந்து, அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் நீடிக்க வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு. இதனை சட்டப்பேரவையில் திமுக செயல் தலைவர், துரைமுருகன் ஆகியோர் தெளிவுபடுத்தியுள்ளனர். சட்டப்பேரவை கூடி நம்பிக்கைத் தீர்மானம் கொண்டு வரும்போது ஓ.பன்னீர்செல்வத்தை திமுக ஆதரிக்கும். இதற்காக அவர்களிடமிருந்து பிரதிபலன் எதிர்பார்க்க மாட்டோம். அமைச்சரவையில் இடமோ, வேறு எதுவோ கேட்க மாட்டோம் என்றார்.