நடிகர் தனுஷுக்கு உரிமை கோரிய வழக்கு: பள்ளிச் சான்றிதழ்களை சமர்ப்பிக்க இரு தரப்புக்கும் உயர்நீதிமன்றம் உத்தரவு
திரைப்பட நடிகர் தனுஷ், தங்களது மகன் என மேலூர் தம்பதி உரிமைகோரும் வழக்கில் பள்ளிச் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க, இரு தரப்புக்கும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
நடிகர் தனுஷ் தங்களது மகன் என்று மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியினர் மேலூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். மேலும், தங்களுக்கு வயதாகிவிட்டதால், பராமரிப்பு தொகை வழங்க தனுஷுக்கு உத்தரவிட வேண்டும் என்றும்கோரியிருந்தனர்.
இந்நிலையில், அவர்கள் கூறும் தகவல்களில் உண்மையில்லை. ஆகவே, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் தனுஷ், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இதற்கு கதிரேசன்-மீனாட்சி தம்பதி பதில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், தனுஷ் தங்கள் மகன் தான். அதற்கான ஆதாரங்கள் உள்ளன என்று குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனுக்கள், நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, தனுஷ் யாருடைய மகன் என்பதை அறிய, இருதரப்பினரும் தங்களிடம் உள்ள பள்ளி மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் 14-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.