ஜம்மு -காஷ்மீர் மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகிக்கும் நீதிபதி என்.பால் வசந்தகுமாரை, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கமும், பெண் வழக்குரைஞர்கள் சங்கமும் வேண்டுகோள் விடுத்துள்ளன.
சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், சங்கத்தின் தலைவர் ஜி.மோகன கிருஷ்ணன், துணை தலைவர் ஆர்.சுதா, செயலாளர் ஆர்.கிருஷ்ண குமார் உள்பட வழக்குரைஞர்கள் பலரும் பங்கேற்றனர்.
பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், கடந்தாண்டு (2016) அக்டோபரில், கொலிஜியம் பரிந்துரை செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் நியமனப் பட்டியலில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி, தற்போது ஜம்மு -காஷ்மீர் மாநில உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் என்.பால்வசந்த குமார் பெயரும் இடம்பெற்றிருந்தது.
தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதிகள் எஃப்.எம்.இப்ராஹிம் கலிபுல்லா, சி.நாகப்பன் ஆகியோர் பணி ஓய்வு பெற்றுவிட்டனர். எனவே, நேர்மை உள்ளிட்ட நற்பண்புகளை தன்னகத்தே கொண்ட நீதிபதி என்.பால் வசந்தகுமாரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க வேண்டும் என தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதே கோரிக்கையை முன்வைத்து, பெண் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.