வாணியம்பாடி அருகே மஞ்சுவிரட்டு விழாவில் காளைகள் முட்டியதில் முதியவர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
வாணியம்பாடியை அடுத்த நிம்மியம்பட்டு கிராமத்தில் மஞ்சுவிரட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. பிற்பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற விழாவில், 80-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. குறிப்பிட்ட தொலைவு குறைந்த விநாடியில் ஓடிய காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவைக் காண்பதற்காக வாணியம்பாடி, ஆலங்காயம், நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். அப்போது காளைகள் முட்டியதில் 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதில், முல்லை கிராமத்தைச் சேர்ந்த ரேணு ( 61), தும்பேரியைச் சேர்ந்த கேசவன் (30) , வாணியம்பாடியைச் சேர்ந்த அஜித்குமார் (19) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
அவர்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு புதன்கிழமை இரவு ரேணு இறந்தார். இந்நிலையில், கேசவன் வியாழக்கிழமை காலை உயிரிழந்தார். இதுகுறித்து ஆலங்காயம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.