சென்னை: அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2 பேர் தங்களது ஆதரவை பன்னீர்செல்வத்திற்கு நேரில் சென்று தெரிவித்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து தமிழக அரசியலில் தற்போது அசாதாரண சூழல் நிலவுகிறது. ஆட்சியமைக்க யாரை அழைப்பது என்பது குறித்து ஆளுநர் பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவ் இன்னும் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இதனால் மாநில அரசியலில் அமைதியான சூழல் நீடித்து வருகிறது.
அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவை, ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆட்சி அமைக்க அழைக்காத நிலையில், சட்டப் பேரவையில் பலப்பரீட்சை நடத்த வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கப் போவது அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவா, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியா என்ற கேள்வி எழுந்துள்ளது.
எந்த அணியாக இருந்தாலும் பெரும்பான்மையை நிரூபிக்க கொறடா உத்தரவு என்பது பெரும் துருப்புச் சீட்டாகச் செயல்பட உள்ளது.
இந்நிலையில், முதல்வர் பன்னீர்செல்வம் அணிக்கு நாளுக்கு நாள் ஆதரவு கூடிக்கொண்டே வருகிறது. தற்போது, நாமக்கல் தொகுதி மக்களவை உறுப்பினர் பி.ஆர். சுந்தரம் மற்றும் கிருஷ்ணகிரி தொகுதி மக்களவை உறுப்பினர் அசோக்குமார் இரண்டு பேரும் முதல்வர் பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு நேரில் சென்று தங்களது ஆதரவைத் தெரிவித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.