ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காமல் தாமதம் செய்வது சட்டவிரோதமானது என்று உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து, அவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது:-
தாற்காலிக முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாக கடிதம் அனுப்புகிறார். அதை ஏற்றுக் கொண்டு, அடுத்த ஏற்பாடு செய்யப்படும் வரை பதவியில் நீடிக்கச் சொல்வது வழக்கமானது.
ஒரு பெரிய அரசியல் மாற்றம் வருகிறது. ஆளும்கட்சி உறுப்பினர்களால் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவரும் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்.
இந்தச் சூழ்நிலையில் அவரை அழைத்துப் பேசி பெரும்பான்மையை உறுதி செய்து கொள்வதுதான் ஆளுநரின் ஜனநாயகக் கடமை. அதுவே சட்டப்படியான ஒன்றாகும். நான்கு நாள்கள் தாமதப்படுத்துவது ஆழமான உள்நோக்கம் கொண்டது. அரசியல் குழப்பத்தை அதிகரிக்கும் வகையில் ஆளுநரின் போக்கு அமைந்துள்ளது.
131 எம்எல்ஏக்கள் ஆதரவைத் தெரிவித்து அதை அனுப்பியாகி விட்டது. அதன்மீது எந்தப் பதிலும் சொல்லாமல் இருப்பதற்கு என்ன அர்த்தம்? மத்திய அரசுக்கு தகவல் அனுப்பியுள்ளதாக கூறப்படுவதே அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.
குடியரசுத் தலைவரிடம் இருந்துதான் விளக்கம் பெற வேண்டும். ஆளுநர் செய்வது சட்ட விரோதமானது என்று தெரிவித்தார்.