சென்னை: ஓரளவுக்கு தான் பொறுமையைக் கையாள வேண்டும். அதற்கு மேல் நாம் ஒன்று சேர்ந்து செய்ய வேண்டியதை செய்வோம் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலர் சசிகலா கூறியுள்ளார்.
போயஸ் தோட்ட வளாகத்தில் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான தொண்டர்களிடையே பேசிய சசிகலா, ஏராளமான தொண்டர்களையும, அதிமுகவையும் நான் பத்திரமாக காப்பாற்றுவேன் என்பதுதான் அம்மாவின் உறுதியான நினைப்பு.
புரட்சித் தலைவி ஜெயலலிதா பல சோதனைகளைத் தாண்டி கழகத்தைக் கட்டிக் காத்தார்கள். அதனுடைய பலன் இன்று இந்தியாவிலேயே அதிமுக மூன்றாவது பெரிய கட்சி என்ற பெருமையை பெற்றுள்ளது.
ஜெயலலிதா நம்மிடம் தான் இருக்கிறார். அவர் நம் கழகத்தில் உள்ள புல்லுருவிகளை அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறார். அப்படிதான் இன்று நடக்கும் சூழ்நிலைகள் நமக்குத் தெரிவிக்கிறது.
ஒன்றரை கோடி தொண்டர்கள் நம்முடன் இருக்கும் வரை நம்மை பிரித்தாள நினைக்கும் எவராக இருந்தாலும் தோற்றுப் போவார்கள்.
ஜெயலலிதா சொல்வது போல நம் இயக்கம் ஒரு எஃகு கோட்டை. அந்த கோட்டையை யாராலும் அசைக்க முடியாது. பல சோதனைகளை கடந்து தான் அவர் இந்த இயக்கத்தை நடத்தி வந்தார். அதுபோல நமக்கும் இவ்வளவு பேர் துணை இருக்கும் போது நான் எதற்கும் அஞ்சப் போவதில்லை.
நியாயமாகவும், ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கை வைத்திருப்பதால் கொஞ்சம் அமைதி காக்கிறேன். ஓரளவுக்கு தான் பொறுமையைக் கையாள வேண்டும். அதற்கு மேல் நாம் ஒன்று சேர்ந்து செய்ய வேண்டியதை செய்வோம் என்றார் சசிகலா.