2017 -19 -ஆம் ஆண்டுக்கான சீன -இந்திய ஆராய்ச்சித் திட்டத்தின் தலைவராக, சென்னை ஐஐடி உதவிப் பேராசிரியர் ஜோ தாமஸ் கரக்கட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரூ. 28.12 லட்சம் மதிப்பிலான இந்த ஆராய்ச்சித் திட்டத்துக்கு அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள இந்திய -சீன கல்வி நிறுவனம், உலக அளவில் 8 நபர்களில் ஒருவராக இவரைத் தேர்வு செய்துள்ளது.
இதன் மூலம் ரூ.3.34 லட்சம் ரொக்கப் பரிசை ஜோ தாமஸ் பெற்றுள்ளார்.
இதுகுறித்து சென்னை ஐஐடி வெளியிட்ட செய்தி:
இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் வளர்ச்சி, ஏற்றத் தாழ்வுகள் குறித்து ஆய்வு செய்வதே இந்த ஆராய்ச்சித் திட்டத்தின் நோக்கமாகும்.
உலக அளவில் நடத்தப்பட்ட தேர்வில் 8 ஆராய்ச்சியாளர்களில் ஒருவராக சென்னை ஐஐடி சமூக அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் ஜோ தாமஸ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
இதன் மூலம் கள ஆய்விலும், நியூயார்க்கில் சிறிது காலம் தங்கியிருந்தும் இவர் ஆராய்ச்சியில் ஈடுபட முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.