தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய ஆளுநர் வித்யாசாகர் ராவ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பான வழக்கின் விசாரணை இன்னும் சில நாள்களில் உச்சநீதிமன்றத்தில் தொடங்கவுள்ளது. அதில் தமிழகத்தின் நியாயத்தை முன்வைத்து வாதாடவேண்டும்.
"நீட்' தேர்வு தொடர்பாக நிறைவேற்றியுள்ள சட்டங்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்படவில்லையென்றால், லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.
வறட்சியின் காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது தொடர்கதையாக இருக்கிறது. அவர்களுக்கான வறட்சி நிவாரணம் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
இந்தக் கடமைகளையெல்லாம் சிறப்பாகச் செய்வதற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையானதொரு அரசு இல்லையென்றால் மாபெரும் இழப்பைத் தமிழகம் சந்திக்க நேரிடும்.
எனவே, ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.