பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தில் மாவட்ட தேமுதிக சார்பில் வளர்ச்சி நிதிக்காக, "உங்களுடன் நான்' என்னும் நிகழ்ச்சியில் விஜயகாந்த் வெள்ளிக்கிழமை பங்கேற்றார்.
தேமுதிக வளர்ச்சி நிதிக்காக மாவட்டம் தோறும் சென்று, தொண்டர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் "உங்களுடன் நான்' என்னும் நிகழ்ச்சியை விஜயகாந்த் நடத்தி வருகிறார். அதன்படி, பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் விஜயகாந்த் தங்கியிருந்தார்.
அப்போது, கட்சியின் மாநில நிர்வாகிகளுடன் கட்சி செயல்பாடு, இன்றைய அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை மேற்கொண்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் கட்சியின் நிலவரம் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து, பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தில் நடைபெற்ற "உங்களுடன் நான்' என்னும் நிகழ்ச்சியில் விஜயகாந்த் பங்கேற்றார்.
மாவட்ட செயலர் துரை. காமராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தலைமை நிலைய செயலர் பார்த்தசாரதி, பொருளாளர் இளங்கோவன், மாநில துணை செயலர்கள் உமாநாத், ஜாகீர், கேப்டன் மன்ற செயலர் அன்புச்செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பங்கேற்ற கட்சி தொண்டர்கள் தங்களது குடும்பத்தினருடன், தேமுதிக நிறுவனர் விஜயகாந்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இதேபோல், அரியலூரில் கல்லங்குறிச்சி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விஜயகாந்த் பங்கேற்று கட்சியின் நிலை குறித்து தொண்டர்களிடம் கேட்டறிந்தார். பின்னர், தொண்டர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.