யாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதை தொகுதி மக்களைச் சந்தித்து கேட்டறிந்த பின்னரே முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்து வருவதாக கவுண்டம்பாளையம் எம்எல்ஏ ஆறுகுட்டி தெரிவித்தார்.
சென்னையில் பன்னீர்செல்வம் இல்லத்துக்கு வெள்ளிக்கிழமை வருகை தந்த ஆறுகுட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பொதுமக்களின் ஆதரவோடு, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவான நிலையை எடுத்துள்ளேன். இதனால், தொகுதி மக்களிடம் இருந்து ஆதரவு குவிந்து வருகிறது.அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது தொகுதி அலுவலகங்களுக்குச் சென்று, யாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பது குறித்து மக்களின் கருத்துகளைக் கேட்டறிந்து முடிவு செய்ய வேண்டும்.
தன்னிச்சையாக முடிவு செய்தால், பொதுமக்கள் தொகுதிக்குள் வரவிட மாட்டார்கள். இதையடுத்து, பொதுமக்களின் ஆதரவும் கிடைக்காத நிலை ஏற்படும். விடுதிகளில் தங்கியுள்ள எம்எல்ஏக்களில் பலர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருக்கின்றனர் என்றார்.