மதுராந்தகத்தை அடுத்த மேல்மருவத்தூர் ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத்தின் சார்பில், அரசு மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகள் அரசுப் பொது தேர்வுகளில் தேர்ச்சி பெற வெள்ளிக்கிழமை ஞானபீட வளாகத்தில் சிறப்பு வேள்வி பூஜை நடைபெற்றது.
மதுராந்தகத்தை சுற்றியுள்ள அச்சிறுப்பாக்கம், மேல்மருவத்தூர், மதுராந்தகம், வில்வராயநல்லூர், பொலம்பாக்கம், சோத்துப்பாக்கம், தொழுப்பேடு, எலப்பாக்கம், ஓரத்தி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் 35-க்கும் மேற்பட்ட அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் சுமார் 1,500 மாணவ, மாணவிகள் இந்த வேள்வி பூஜையில் கலந்து கொண்டனர்.
வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு ஞானபீட வளாகத்தில் சிறப்பு பஞ்சபூத வழிபாடு மற்றும் வேள்வி பூஜை ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத் தலைவர் கோ.ப.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.
பின்னர், தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கு பாதபூஜை செய்தல் நோட்டு புத்தகங்கள் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத்தினர் செய்திருந்தனர்.