தமிழகத்தில் ஆட்சி அமைவதற்கு நடவடிக்கை எடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவது உள்நோக்கமுடையது என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தற்போது காபந்து அரசின் முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வம், தனக்குப் பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாகவும், சட்டப்பேரவையில் தன்னால் அதனை நிரூபிக்க முடியும் என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார். தான் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், தனக்கு பெரும்பான்மை இருப்பதாகவும் சசிகலா உறுதிபடக் கூறுகிறார். இந்த நிலையில், மிக காலதாமதாமாக சென்னை வந்த ஆளுநரை இருவரும் சந்தித்துள்ளனர். இருப்பினும், எவ்வித முடிவும் எடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவது உள்நோக்கமுடையது. தமிழகத்தில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. விவசாயிகள் செத்து மடிந்து கொண்டிருக்கின்றனர். ஏராளமான பிரச்னைகள் உள்ளன. அரசு நிர்வாகம் முற்றிலும் செயல் இழந்துள்ளது.
இந்த நிலையில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள அதிகார போட்டியைத் தனக்கு சாதகமாக்கிக் கொள்ள பாஜக முயல்வதும், அதற்கு ஆளுநர் உடந்தையாக இருப்பதும் ஜனநாயக விரோத செயலாகும். உடனடியாக, சட்டப்பேரவையைக் கூட்டி, யாருக்கு பெரும்பான்மை உள்ளதோ அவர்கள் ஆட்சி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது ஆளுநரின் கடமையாகும் என்று இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.