நாட்டில் மனித நேயம் இயற்கையாகவே உள்ளது என்று பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜா கூறினார்.
பண்டிட் தீனதயாள் உபாத்யாயவின் நூற்றாண்டு விழா நினைவு கருத்தரங்கம் இந்தியா ஃபவுண்டேசன், தேஜஸ் அறக்கட்டளை, தமிழக இளம் சிந்தனையாளர்கள் மன்றம் ஆகியன சார்பில் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், ஒருங்கிணைந்த மனித நேயத்தை முன்னெடுத்துச் செல்லுதல் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் ஹெச்.ராஜா பேசியதாவது:-
நாட்டில் மனித நேயம் இயற்கையாகவே உள்ளது. எனினும் சுதந்திரத்துக்கு முன்னும், பின்னும் மேற்கத்திய கலாசாரங்கள் சற்று அதிகமாக இருந்தன.
இதன் காரணமாக மேற்கத்திய கொள்கைகளான முதலாளித்துவம், மார்க்சியக் கொள்கைகளை அப்போது அதிகம் கடைப்பிடித்தனர். அப்போது, மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும். சாதி, மதம், இனம், பொருளாதார அடிப்படையில், உயர்ந்தோர்-தாழ்ந்தோர் என வேற்றுமைப்படுத்தி பார்க்கக் கூடாது என்று தீனதயாள் உபாத்யாய வலியுறுத்தினார்.
பொருளாதாரத்தில் கீழ்நிலையில் இருப்பவர்களை மேம்படுத்த வேண்டும், அவர்களுக்கு கல்வியறிவை புகட்ட வேண்டும் என்றும் வற்புறுத்தினார்.
அவரது கொள்கைகளின்படியே வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் "அனைவருக்கும் கல்வித் திட்டம்' நடைமுறைப்படுத்தப்பட்டது என்றார். சுதந்திரப் போராட்ட வீராங்கனை சரஸ்வதி ராஜாமணி, பாஜக தேசிய பொதுச் செயலர் ராம் மாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.