நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களை சசிகலாவுக்கு ஆதரவாக செயல்படும்படி மிரட்டி அடைத்து வைத்துள்ளனர்; அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் 3 பேரையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீபா ஆதரவாளர்கள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.
வழக்குரைஞர் செல்ல.ராசாமணி தலைமையில் தீபா ஆதரவாளர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரனிடம் சனிக்கிழமை அளித்த மனு விவரம்:
கடந்த 5-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள நாமக்கல் எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கர், சேந்தமங்கலம் எம்.எல்.ஏ. சி.சந்திரசேகரன், திருச்செங்கோடு எம்.எல்.ஏ. பொன்.சரஸ்வதி ஆகிய 3 பேரும் சென்றனர். அதன் பின்னர், தங்கள் தொகுதிக்கு அவர்கள் திரும்பி வரவில்லை. தமிழக முதல்வராக சசிகலா ஆதரவளிக்கும்படி மூன்று எம்.எல்.ஏ.க்களையும் வற்புறுத்தி, தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி கடத்திச் சென்று சென்னையில் ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளதாகத் தெரிகிறது.
இந்த மூன்று எம்.எல்.ஏ.க்களிடம் செல்லிடப்பேசியில் தொகுதி பிரச்னை சம்பந்தமாக பேச முற்பட்டும் இணைப்புக் கிடைக்கவில்லை. அனைத்து இடங்களிலும் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. 3 எம்.எல்.ஏ.க்களும் கடந்த ஒரு வாரமாக தொகுதிக்கு வராததால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
எம்.எல்.ஏ.க்களின் விருப்பத்துக்கு மாறாக மிரட்டி, சசிகலாவுக்கு ஆதரவாக செயல்படும்படி அறையில் அடைத்து வைத்துள்ளதாகத் தெரியவருகிறது. அதனால், எந்த நேரமும் 3 எம்.எல்.ஏ.க்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் அவர்களை மீட்டுத் தர வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.