சசிகலாவை முதல்வராக அறிவிப்பதில் உள்ள சட்ட சிக்கலை விளக்க வேண்டும்: இயக்குநர் அமீர்

சசிகலாவை முதல்வராக அறிவிப்பதில் உள்ள சட்ட சிக்கலை ஆளுநர் வித்யாசாகர் ராவ் விளக்க வேண்டும் என திரைப்பட இயக்குநர் அமீர் கூறினார்.

மதுரை: சசிகலாவை முதல்வராக அறிவிப்பதில் உள்ள சட்ட சிக்கலை ஆளுநர் வித்யாசாகர் ராவ் விளக்க வேண்டும் என திரைப்பட இயக்குநர் அமீர் கூறினார்.
 மதுரை கே.கே.நகரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் ஆளும் கட்சியில் ஏற்கெனவே உள்ள முதல்வர் பன்னீர் செல்வம் தனது ராஜிநாமா வற்புறுத்தப்பட்டு வாங்கப்பட்டது என்றால், அதை தனியாகத்தானே ஆளுநர் மாளிகைக்குச் சென்று அளித்தார். அப்போது ஏன் அவர் அதை வெளிப்படையாகக் கூறவில்லை.
 மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது தினமும் சென்றவர் அதுகுறித்து அப்போதே விளக்கமளிக்காதது ஏன்?
 அதிமுக பொதுச்செயலர் சசிகலாவுக்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் பெரும்பான்மையினர் ஆதரவளிக்கிறார்கள் என்றால், அவரை அரசியல் சாசன சட்டப்படி பதவி ஏற்க அழைப்பது ஆளுநர் கடமை. ஆனால், ஆளுநர் தாமதிப்பது ஏன் என்பதையும், அதில் உள்ள சட்டச்சிக்கலையும் மக்களுக்கு விளக்குவது அவசியம்.
 பாஜகவின் மாநிலத் தலைவர் அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரிப்பதாகக் கூறுகிறார். மூத்த தலைவர் சுப்பிரமணியசாமியோ அதிமுக பொதுச்செயலர் சசிகலாவை ஆதரிக்கிறார். ஆகவே பாஜகவின் நிலையை அக்கட்சியினர் தெளிவுபடுத்தவேண்டும்.
 மக்கள் பிரதிநிதிகள் தொகுதிப் பிரச்னையைத் தீர்ப்பதை விட்டு தனியார் விடுதிகளில் தங்குவது சரியல்ல. அவர்களை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கவேண்டும்.
 மத்திய அரசு தமிழக அரசியல் சூழலை சாதகமாக்கி தனது அரசியல் விளையாட்டை நடத்துவது சரியல்ல. தமிழகத்தில் முக்கிய பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ள நிலையில், அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com