திண்டுக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தை கைப்பற்றப் போவதாக வந்த தகவலை அடுத்து, ராஜிநாமா செய்த இளைஞர் பாசறை மாவட்டச் செயலர் உள்பட 45 பேரை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறைச் செயலராகப் பணியாற்றி வந்த ஆனந்தகுமார், கடந்த செவ்வாய்க்கிழமை அப்பொறுப்பிலிருந்து திடீரென விலகினார். பின்னர், தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்த அவர், தீபா பேரவையில் இணைந்து கொண்டார். இதனிடையே, திண்டுக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தை கைப்பற்றப் போவதாகவும், அதில் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்தப் போவதாகவும் தகவல் வெளியானது. இது குறித்து தகவலறிந்த அதிமுகவினர், வனத் துறை அமைச்சர் சி. சீனிவாசன் மகன் ராஜ்மோகன், மாவட்டச் செயலர் மகன் பிரேம் ஆகியோர் தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் திரண்டனர்.
ஆனால், சனிக்கிழமை மாலை 4 மணிக்கு ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்த ஆனந்தகுமார் மற்றும் தீபா பேரவையினர் 25 பேரை, திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் தெய்வம் தலைமையிலான போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர். தனியார் திருமண மண்டபத்தில் ஆனந்தகுமார் உள்ளிட்டோர் தங்க வைக்கப்பட்ட தகவல் தெரியாமல், அதிமுக அலுவலகத்தில் ஏராளமான தொண்டர்கள் தொடர்ந்து காத்திருந்தனர்.