பெங்களூரு: முதல்வர் சித்தராமையா தனது முதல்வர் நாற்காலியை காப்பாற்றிக் கொள்ள காங்கிரஸ் கட்சியின் மேலிடத்திற்கு ரூ.1 ஆயிரம் கோடி நிதி வழங்கியுள்ளார். இதனை நிரூபித்தால் சித்தராமையா பதவி விலகத் தயாரா என்று பாஜக மாநிலத்தலைவர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு மல்லேஸ்வரத்தில் இன்று நடந்த பாஜக கட்சியின் செயற்க்குழுக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
முதல்வர் சித்தராமையா தனது முதல்வர் நாற்காலியை காப்பாற்றிக் கொள்ள அனைத்து வழிகளிலும் முயற்சித்து வருகிறார். இதற்காக காங்கிரஸ் கட்சியின் மேலிடத்திற்கு அவர் ரூ. 1 ஆயிரம் கோடி நிதி அளித்துள்ளார். இதனை சட்டமேலவை உறுப்பினரும், முதல்வர் சித்தராமையாவின் நெருங்கிய நண்பருமான கோவிந்தராஜ், தனது நாட்காட்டியில் எழுதி வைத்துள்ளது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான அனைத்து ஆதாரங்கங்களும் என்னிடம் உள்ளது. தேவைப்பட்டால் நானும் இதனை வெளியிடவும் தயாராக உள்ளேன். அப்படி நான் ஆவணங்களை வெளியிட்டால், எனது சவாலை ஏற்று முதல்வர் சித்தராமையா தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று கூறினார்.