விருத்தாசலம் எம்எல்ஏவை காணவில்லை: காவல்நிலையத்தில் புகார்

விருத்தாசலம் சட்டப்பேரவை உறுப்பினரை கண்டுபிடித்து தருமாறு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடலூர்: விருத்தாசலம் சட்டப்பேரவை உறுப்பினரை கண்டுபிடித்து தருமாறு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விருத்தாசலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மலர்தாசன் (54). இன்று விருத்தாசலம் காவல்நிலையத்திற்கு சென்று காவல் ஆய்வாளர் ராஜ தாமரைபாண்டியனிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். மனுவில், கடந்த சில தினங்களாக விருத்தாசலம் சட்டப்பேரவை உறுப்பினர் வி.டி.கலைச்செல்வன் எங்கு இருக்கிறார் என தெரியவில்லை. அவரை கண்டுபிடித்து தருமாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
புகாரைப் பெற்றுக்கொண்ட ஆய்வாளர், சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் சென்று பாருங்கள் என்றார். அங்கு சென்ற மலர்தாசன், சட்டப்பேரவை உறுப்பினர் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து காவல் ஆய்வாளர் தனது செல்லிடப்பேசி மூலமாக சட்டப்பேரவை உறுப்பினர் கலைச்செல்வனை தொடர்புகொண்டு எங்கிருக்கிறீர்கள் எனக் கேட்டு, உங்களைக் காணவில்லை என புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த கலைசெல்வன், தான் சென்னையில் இருப்பதாக கூறினார். பிறகு புகார் அளித்தவரிடமும் கலைச்செல்வன் தொடர்புகொண்டு, கட்சிப் பணியாக சென்னை வந்திருப்பதாகவும், சில தினங்களில் திரும்பி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து மலர்தாசன் தனது புகார் மனுவை வாபஸ்பெற்றுக் கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com