கூவத்தூரில் சிறைவைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களை பேரணியாகச் சென்று விடுப்போம் என்று வேலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.செங்குட்டுவன் கூறினார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து பின்னர், செங்குட்டுவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயநலம் இல்லாதவர். அவரை எளிதில் சந்திக்கலாம். எளிமையானவர். அவரின் செயல்பாடு எத்தகைய வகையில் இருக்கும் என்பதை, வர்தா புயல், ஜல்லிக்கட்டு, சென்னை குடிநீர் தட்டுப்பாடு பிரச்னைகளை கையாண்ட விதத்தில் மக்கள் நன்கு அறிந்துள்ளனர். அவருக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளை திறம்பட நிறைவேற்றும் தகுதி, உடைய ஒரே நபர் ஓ.பன்னீர்செல்வம்தான்.
மக்களின் நலனுக்காக ஓய்வு இல்லாமல், ஒளிவுமறைவு இல்லாமல் சேவை செய்ய பன்னீர்செல்வம் தயாராக உள்ளார். அவருடன் நாங்களும் இணைந்து உழைக்க தயாராக இருக்கிறோம். தனக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக கூறி சசிகலா சில எண்களையும், சில ஆவணங்களையும் ஆளுநரிடம் தெரிவித்துள்ளார். அது உண்மை அல்ல. பெரும்பான்மை யாருக்கு உள்ளது என்பது சட்டப் பேரவையில் மட்டுமே நிரூபிக்க முடியும். ஆனால் அவர்களை கட்டாயப்படுத்தி, சிறைவைக்கப்பட்டுள்ளதால் அவர்கள் சந்தித்து ஆதரவு தெரிவிக்க இயலாத சூழலில் உள்ளனர். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமைக்குள் சிறைவைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களை விடுவிக்காவிட்டால், பேரணியாகச் சென்று விடுவிப்போம் என்றார்.