காட்பாடியில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மண்டபத்திலிருந்து வெளியே வந்தபோது, வேலூர் ஜிஜிஆர் பொறியியல் கல்லூரித் தலைவர் ஜி.ஜி.ரவி மர்ம நபர்களால் ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தையடுத்து ஏற்பட்ட பதற்றம் காரணமாக கடைகள் அடைக்கப்பட்டன. வேலூர் சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் ஜி.ஜி.ரவி. இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவர் கடந்தாண்டு தோட்டப்பாளையத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் கலந்து கொண்டார். இந்தத் தகவல் அறிந்து அங்கு வந்த ரௌடியான அதிரடி மகா, ஜி.ஜி.ரவியைக் கொலை செய்ய முயன்ற போது அவரது ஆதரவாளர்களால் மகா கொலை செய்யப்பட்டார்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் நீடித்து வந்தது. இந்நிலையில், காட்பாடியில் ஞாயிற்றுக்கிழமை இரவு திருமண வரவேற்பு நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு விட்டு ஜி.ஜி. ரவி வெளியே வந்தார். அப்போது அங்கு வந்த மர்மக் கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் ஜி.ஜி.ரவியின் தலை, கையில் பலமாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ்.ஆரோக்கியம், காட்பாடி காவல் ஆய்வாளர் பாண்டி ஆகியோர் கொலை நடந்த இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். கொலையாளிகள் குறித்த விவரம் உடனடியாகத் தெரியவில்லை. ஜி.ஜி.ரவியின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்தச் சம்பவத்தையடுத்து அப்பகுதியில் இருந்த கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதோடு, பதற்றமான சூழல் நிலவுவதால் பாதுகாப்புப் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.