சசிகலாவுக்கான ஆதரவு முடிவில் மாற்றமில்லை என ஆம்பூர் எம்எல்ஏ ஆர். பாலசுப்பிரமணி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
வேலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், வணிகவரித்துறை அமைச்சருமான கே.சி. வீரமணியின் நெருங்கிய ஆதரவாளர் ஆம்பூர் எம்எல்ஏ ஆர். பாலசுப்பிரமணி. இவர் ஞாயிற்றுக்கிழமை ஆம்பூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கூவத்தூர் விடுதியில் யாரும் அடைத்து வைக்கப்படவில்லை. அனைவரும் அங்கு சுதந்திரமாகத் தான் இருக்கிறோம். காணாமல் போனதாக சிலர் தவறான தகவலை பரப்பி வந்துள்ளனர். ஆம்பூர் பகுதி மக்கள் மற்றும் கட்சியினருடன் தொடர்பில்தான் இருந்து வந்தேன். என்னுடைய இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு தகவல் தெரிவித்து, அவருடைய அனுமதி பெற்றுத் தான் ஆம்பூருக்கு வந்துள்ளேன். வேலூர் மாவட்டத்தைப் பொருத்தவரை அமைச்சர் கே.சி. வீரமணி எடுக்கிற முடிவுதான் இறுதியானது.
அதன்படி, சசிகலாவுக்கான ஆதரவு முடிவில் மாற்றம் எதுவும் இல்லை என்றார்.