தமிழக அரசியல் நிலைக்கு மத்திய அரசுதான் காரணம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் அளித்த பேட்டி:
சசிகலா ஆதரவாளர்கள் சுதந்திரமாக இருக்கிறோம் எனக் கூறுகின்றனர். அங்கே கூட்டம் நடத்துகின்றனர். வெளியே பேசுகின்றனர். அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு உண்மையா இல்லையா என்பது குறித்து அவர்களே தெளிவுபடுத்தியுள்ளனர்.
இது முழுமையாகத் தெளிவுபடுத்தப்பட வேண்டுமானால், அந்தப் பொறுப்பு ஆளுநர் கையில்தான் உள்ளது. சட்டப் பேரவையில் பெரும்பான்மை யாரோ, அவர்களை உடனடியாக அழைத்து, அவர்களுக்கு வாய்ப்பைக் கொடுத்தால், சட்டப் பேரவை உறுப்பினர்கள் பேரவைக்கு வரவேண்டிய பொறுப்பு தானே வந்துவிடும். அப்போது, அடைத்து வைத்திருக்கின்றனரா இல்லையா என்ற பிரச்னை இருக்காது.
தமிழ்நாட்டு அரசியலில் இந்த அசிங்கங்கள் அரங்கேற்றப்படக் கூடாது. இதற்கு தில்லியின் போக்குதான் முழுக் காரணம். பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிறது என்பதால், அதிமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களை தில்லிக்கு (மத்திய அரசு) சாதகமான நிலையை உருவாக்க வேண்டும் என்பதாலும், அதற்கு அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை எவ்வளவு இழுக்க வேண்டுமோ, அதைச் செய்யுமாறு கட்டளை இடப்பட்டுள்ளது. அந்தக் கட்டளை நிறைவேற்றப்பட்டு வருகிறது என்றார் வீரமணி.