பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பிப்.15-இல் ஏலம்
திருவள்ளூர் மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பிப்ரவரி 15-இல் ஏலம் விடப்படும் என மாவட்ட எஸ்.பி. சாம்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், பிப்ரவரி 15-ஆம் தேதி காலை 10 மணியளவில், திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே உள்ள மதுவிலக்கு அமல் பிரிவு அலுவலகத்தில் ஏலம் விடப்பட உள்ளது. வாகனங்களை ஏலம் கேட்பவர்கள் முன் வைப்புக் கட்டணத் தொகையாக ரூ. 1,000 செலுத்த வேண்டும்.
வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் கேட்டத் தொகையுடன் விற்பனை வரி 14.5 சதவீதத்தை உடனடியாகச் செலுத்த வேண்டும்.
அவ்வாறு செலுத்தும்போது முன் வைப்புக் கட்டணத் தொகை அதில் சரி செய்யப் படும். ஏலத்தில் கலந்து கொண்டு வாகனம் எடுக்காதவர்களுக்கு முன் வைப்புக் கட்டணத் தொகையானது, ஏலத்தின் முடிவில் திருப்பித் தரப்படும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.