தமிழக சட்டப் பேரவையைக் கூட்டினால் அதிமுக எம்எல்ஏ-க்களின் விருப்பமும், நிலைப்பாடும் தெரிந்துவிடும் என்றார் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர்.
பெரம்பலூர் வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகம் போன்று பிரச்னை நிலவிய அருணாசலப் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மத்திய பாஜக அரசு தலையிட்டு, ஆட்சியை கலைத்துவிட்டு பலனடைய முயற்சித்தது போல, தமிழகத்திலும் நடவடிக்கை எடுக்க முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் வருகிறது. எனவே, ஆளுநர் நடுநிலையோடு, உடனடியாக ஒரு அரசை ஏற்படுத்த முன்வர வேண்டும். நாங்கள் யாரையும் ஆதரிக்கவில்லை. யார் வேண்டுமானாலும் முதல்வராக வரட்டும்.
பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில், சட்டப் பேரவையை உடனடியாகக் கூட்ட ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எம்எல்ஏ-க்கள் சுயவிருப்பத்துடன் விடுதியில் தங்கியுள்ளார்களா, அல்லது மிரட்டுதலின் பேரில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனரா என்பது சட்டப் பேரவையைக் கூட்டினால் தெரிந்துவிடும். ஏனெனில், சட்டப் பேரவைக்குள் யாரையும் மிரட்ட முடியாது. சட்டப் பேரவையில் வாக்கெடுப்பு நடத்தினால் எம்எல்ஏ-க்களின் நிலைப்பாடும் தெரிந்துவிடும் என்றார் அவர்.