சென்னை: தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் இன்று தலைமைச் செயலகம் வரவிருக்கும் நிலையில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்துக்கு வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வர் பதவியை ராஜினாமா செய்து ஒரு வார காலத்துக்குப் பிறகு பன்னீர்செல்வம் இன்று தலைமைச் செயலகம் வர உள்ளார். முதல்வரின் வருகையை முன்னிட்டு, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
முதல்வரின் வருகையை முன்னிட்டு தலைமைச் செயலகத்தில் சற்று பரபரப்பு நிலவி வந்த நிலையில், திடீரெனெ, திமுக செயல் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலினும் தலைமைச் செயலகத்துக்கு வந்திருப்பது பரபரப்பை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், முதல்வர் பன்னீர்செல்வத்தை, ஸ்டாலின் சந்திப்பாரா என்பது குறித்த கேள்விகள் எழுந்தாலும், அதற்கு அதிகாரப்பூர்வ பதில்கள் இல்லை.