உச்சநீதிமன்ற தீர்ப்பு தவறு செய்தவர்கள் தப்பிக்க முடியாது என்பதை உறுதிப்படுத்துகின்றன என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
உச்சநீதிமன்றம் மிகுந்த மதிப்புக்குரியது. அதன் தீர்ப்பு அமுலாக்கப்பட வேண்டும். பொதுவாழ்வில் (நேர்மையற்ற) முறைதவறிய போக்குகளைக் கண்டறிந்து தண்டனை தர இவ்வளவு நீண்டகாலம் தேவைப்படுவது கவலையளிப்பதாகும்.
பொது வாழ்வில் ஈடுபடுபவர்கள் நேர்மை தவறிநடந்து கொள்வதால், அரசியலே வியாபாரம் போல் ஆகிவிட்டது. இதனால் பொதுமக்களுக்கு அரசியல் மீது வெறுப்பு தோன்றும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய தீர்ப்புக்கள் தவறு செய்தவர்கள் தப்பிக்க முடியாது என்பதை உறுதிப்படுத்துகின்றன. ஏற்கனவே ஆளும் கட்சி உறுப்பினர்களால் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டிருந்த திருமதி. வி.கே.சசிகலா விதிகளின்படி பத்து ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாதவராகிவிட்டார். எனவே வேறு ஒரு தலைவரைத் தேர்ந்தெடுப்பது அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் பொறுப்பாகும்.
சட்டத்தின் ஆட்சி தமிழ்நாட்டில் நிலவ, அரசியல் சாசனம் வகுத்துள்ளபடி உரிய நடவடிக்கைகளை ஆளுநர் காலதாமதமின்றி எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.