கூவத்தூரில் தமிழக எம்எல்ஏ-க்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நட்சத்திர விடுதியில் கடலூர் எஸ்பி விஜயகுமார், காஞ்சிபுரம் எஸ்பி முத்தரசி ஆகியோர் திங்கள்கிழமை இரவு திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் வகையிலும், கட்சியில் பிளவு ஏற்படாத வகையிலும், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, அக்கட்சியின் எம்எல்ஏ-க்களை கூவத்தூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கடந்த சில தினங்களாக தங்க வைத்துள்ளார்.
எம்எல்ஏ-க்கள் கடத்தி வைக்கப்பட்டுள்ளதாக வந்த புகாரின் பேரில் வட்டாட்சியர், டிஎஸ்பி ஆகியோர் தலைமையில் வருவாய்த் துறையினர், போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
இந்த நிலையில், நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள எம்எல்ஏ-க்கள் மீது மக்கள் கோபமுற்று இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவிய தகவலை அடுத்து, கூவத்தூர் விடுதிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும், சொத்துக்குவிப்பு வழக்கில் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகளை கடலூர் எஸ்பி விஜயகுமார், காஞ்சிபுரம் எஸ்பி முத்தரசி ஆகியோர் திங்கள்கிழமை இரவு நேரில் சென்று பார்வையிட்டனர். அங்கிருந்த டிஎஸ்பி மற்றும் ஆய்வாளர்களிடம் நிலவரம் குறித்து கேட்டறிந்தனர்.