சென்னையில் மரணம் அடைந்த சிறுமி ஹாசினியின் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: காஞ்சிபுரம் மாவட்டம் மாதாநகர் 10 -ஆவது தெருவில் வசித்து வந்த சிறுமி ஹாசினியின் சடலம் அனகாபுத்தூர் அருகே காவல் துறையினரால் கண்டெடுக்கப்பட்டது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததில், அந்தச் சிறுமி உயிரிழந்துள்ளார் என்று தெரியவந்தவுடன் குற்றம்சாட்டப்பட்டவரை காவல் துறையினர் கைது செய்து, புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்தச் சம்பவத்துக்கு காரணமான குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனையைப் பெற்றுத் தர விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று தனது அறிவிப்பில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.