கூவத்தூரில் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களைத் தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட செய்தியாளர்கள் ஆட்சியர் மற்றும் எஸ்பி ஆகியோரிடம் திங்கள்கிழமை புகார் மனு அளித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், கூவத்தூரில் எம்எல்ஏ-க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலின் பேரில், செய்தி சேகரிப்பதற்காக மாவட்டச் செய்தியாளர்கள் அங்கு சென்றனர். அவர்களை அங்கிருந்த மர்ம நபர்கள் சிலர் தாக்கி விரட்டியுள்ளனர். இதில் சில செய்தியாளர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இந்த நிலையில், திங்கள்கிழமை மாவட்ட செய்தியாளர்கள், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி, மாவட்ட எஸ்பி முத்தரசி ஆகியோரைச் சந்தித்து புகார் மனுவை கொடுத்தனர். அதில், செய்தி சேகரிக்கச் சென்ற தங்களைத் தாக்கிய நபர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.