சொத்துக் குவிப்பு வழக்கின் பின்னணி!

ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசின் மேல்முறையீட்டு மனுவை...
சொத்துக் குவிப்பு வழக்கின் பின்னணி!

தமிழக அரசியலில் மிகப் பரபரப்பான கட்டம் இப்போது நிலவுகிறது. 1991-96-ல் தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல நீதிமன்றங்களில் பலதரப்பட்ட தீர்ப்புகளைச் சந்தித்த இந்த வழக்கில் கடைசியாக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதற்கிடையே, இந்த வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட ஜெயலலிதா, சமீபத்தில் மரணமடைந்தார்.

இந்த நிலையில், தமிழக அரசியலில் பெரிய திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. அந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக குறிப்பிடப்பட்டுள்ள சசிகலா மற்றும் தற்போது தமிழக முதல்வராக உள்ள பன்னீர்செல்வம் இடையே கட்சியிலும் ஆட்சியிலும் அதிகாரப் போட்டி நிலவுகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பையொட்டித்தான் தமிழகத்தின் அரசியல் களத்தில் அடுத்து என்ன என்பது தீர்மானிக்கப்பட உள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கின் பின்னணி பற்றி ஒரு பார்வை:

வழக்கின் தொடக்கக் காலத்தில், அப்போது ஜனதா கட்சியின் தலைவராக இருந்த சுப்பிரமணியன் சுவாமி அப்போதைய தமிழக ஆளுநர் சென்னா ரெட்டியிடம் அனுமதி பெற்று, பிறகு ஜூன் 14, 1996-ல் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த சென்னை அமர்வு நீதிமன்ற நீதிபதி ராமமூர்த்தி, தமிழ்நாடு ஊழல் மற்றும் கண்காணிப்பு துறை இதனை புலனாய்வு செய்ய ஆணையிட்டார். இச்சொத்துக்களின் அன்றைய மதிப்பு 66.65 கோடி ரூபாயாகும். 

1996 ஜூன் 14 அன்று, 1991-1996-ம் ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக ஜெயலலிதா சொத்து சேர்த்ததாக அப்போதைய ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்குத் தொடர்ந்தார். ஜூன் 31-ம் தேதி மனுவை விசாரித்த நீதிபதி, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை டி.ஜி.பி.யாக இருந்த லத்திகா சரணை விசாரிக்க உத்தரவிட்டார். அவ்விசாரணையின்படி ஜெயலலிதா கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் பிணையில் வெளியானார். வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இவ்வழக்கு 1996-ல் ஆட்சிக்கு வந்த திமுக அரசால், 1996 டிசம்பர் அன்று அரசுத்தரப்பு வழக்காக மாற்றப்பட்டது. 1996 டிசம்பர் மாதத்தில், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டை வண்ணத் தொலைக்காட்சி வழக்குக்காக  சோதனையிட்டு, அசையும் சொத்துக்களாக 800 கிலோ வெள்ளி, 28 கிலோ தங்கம், 750 ஜோடி காலணிகள், 10,500 புடவைகள், 91 கைக்கடிகாரங்கள் மற்றும் சில மதிப்புமிக்க பொருள்களைக் கைப்பற்றியது. அவை அனைத்தும் சென்னையிலுள்ள ரிசர்வ் வங்கியின் காப்பகத்தில் வைக்கப்பட்டன. 

1997 ஜூன் 4-ல், ஊழல் தடுப்புச் சட்டத்தில் ஜெயலலிதா மீது வழக்குத் தொடரப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அக்டோபர் 1-ல், தமிழக ஆளுநர் தொடர்ந்த மனுக்களை நீதிமன்றம் நிராகரித்தது. 1997-ம் ஆண்டு இவ்வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கூட்டு சதியில் ஈடுபட்டு சொத்து சேர்த்ததாக குறிப்பிடப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் கோரிக்கைப்படி 1997-ம் ஆண்டு தமிழக ஊழல் தடுப்பு காவல் துறை தயாரித்த குற்ற அறிக்கை தமிழ் மொழியில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டது. 

2000 ஆகஸ்டு மாதம் வழக்கின் விசாரணை தொடங்கியது. 250 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 2001 காலகட்டத்தில் ஜெயலலிதா தமிழக முதல்வராகப் பணியாற்றியபோது மூன்று அரசு வழக்கறிஞர்கள் ராஜினாமா செய்தனர். விசாரணை அதிகாரி மாற்றப்பட்டார். சிறப்பு நீதிமன்ற நீதிபதியும் மாற்றப்பட்டார்.

2002 நவம்பர் மாதம் வழக்கு விசாரணை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. 76 சாட்சிகள் குறுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டனர். ஜெயலலிதாவுக்கான கேள்விகள், அவரது வீட்டுக்கே அனுப்பப்பட்டன. 2003 குறுக்கு விசாரணையின்போது 76 சாட்சிகளில் 64 பேர் பிறழ் சாட்சிகளாக மாறினர். பிப்ரவரி மாதம் வரை விசாரணை நடந்தது. இவ்வழக்கு விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்றும்படி தி.மு.க. பொதுச் செயலர் அன்பழகன், உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இவ்வழக்கில் சுப்பிரமணியன் சுவாமியும் தன்னை இணைத்துக்கொண்டார். நவம்பர் 18-ம் தேதி இந்த வழக்கு கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டது. கர்நாடக அரசு சார்பில் புதிய நீதிபதி மற்றும் அரசு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டனர்.

2005-ல், அரசு வழக்கறிஞராக பி.வி. ஆச்சார்யா நியமிக்கப்பட்டார். வழக்கை மீண்டும் விசாரிக்க அவர் முயற்சித்தபோது, தனக்கான கேள்விகளை வீட்டுக்கு அனுப்பும்படியும், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்கவும் ஜெயலலிதா நீதிமன்ற உத்தரவைப் பெற்றார். நீதிமன்றம், ஜெயலலிதா நேரடிக் காணொளி மூலமும் எழுத்து மூலமாகவும் விளக்கமளிக்க அனுமதி வழங்கியது. செப்டம்பரில், அரசுத் தரப்பில் 259 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பாக விளக்கமளிக்க ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டும் என சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அக்டோபர், பெங்களூரு தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இந்த விசாரணையில், 567 கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். நவம்பர், பெங்களூரு தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா நேரில் ஆஜராகி 192 கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

2012 ஆகஸ்ட்டில், அரசு வக்கீல் பி.வி. ஆச்சார்யாவுக்கு, மாநில அட்வகேட் ஜெனரல் பதவியை கர்நாடக மாநில அரசு அளித்தது. இதனால், அரசு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்தார். 2013 பிப்ரவரியில், புதிய சிறப்பு வழக்கறிஞராகப் பவானி சிங் பொறுப்பேற்றார். செப்டம்பரில், வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பாலகிருஷ்ணா ஓய்வு பெற்றார். புதிய நீதிபதியாக ஜான் மைக்கேல் டி குன்ஹா நியமிக்கப்பட்டார். 2014 செப்டம்பர் 27, விசாரணை முடிந்து, ஜெயலலிதா குற்றவாளி என நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பு வழங்கினார்.

வழக்கின் முடிவில், சிறப்பு நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது. ஜூலை 1, 1991 முதல் ஏப்ரல் 4, 1996 வரை முதன் முறையாக தமிழகத்தின் முதல்வராக அவர் இருந்தார். இந்த ஐந்து ஆண்டுகளில் அவர் தன் வருமானத்துக்கும் கூடுதலாக சொத்துகளைச் சேர்த்துள்ளதாக நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

செப்டம்பர் 29-ல், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், நீதிபதி மைக்கேல் டி. குன்ஹா வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் மேலும் இவ்வழக்கின் தண்டனையிலிருந்து "பிணை" வழங்க வேண்டும் எனவும் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தனது வழக்கறிஞர் மூலம் மனு தாக்கல் செய்தார்.

செப்டம்பர் 30-ல், பிணையின் மீதான வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என ஜெயலலிதா சார்பாகத் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின்படி, அக்டோபர் 1 அன்று விசாரிக்கப்படும் என கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளர் அறிவித்தார். அக்டோபர் 1, ஜெயலலிதாவின் பிணை மனு மற்றும் மேல்முறையீட்டு மனுவை விடுமுறைக்கால நீதிபதி ரத்னகலா விசாரிக்க மறுத்தார். அக்டோபர் 7, ஜெயலலிதாவின் பிணை மனு நிராகரிக்கப்பட்டது.

பிணை மனு

ஜெயலலிதாவுக்கான பிணை மனுவை பெங்களூரு நீதிமன்றம் 7.10.2014 அன்று நிராகரித்தது. ஜெயலலிதாவுக்கு பிணை வழங்குவதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை என்று நீதிபதி சந்திரசேகரன் தெரிவித்தார். ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட தண்டனையைத் தடை செய்யும் மனுவும் பிணை கேட்பு மனுவும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்படுவதாக நீதிபதி சந்திரசேகரன் தனது தீர்ப்பில் கூறினார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இடைக்கால பிணை வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அவருக்கு 2014, டிசம்பர் 18-ம் தேதி வரை இடைக்கால நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கப்பட்டது. இந்திய உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் பிணைக்காக வாதாடியவர் பாலி சாம் நரிமன். ஜெயலலிதாவுடன் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் உச்ச நீதிமன்றம் பிணை வழங்கி 2014, அக்டோபர் 17 (வெள்ளிக்கிழமை) அன்று உத்தரவிட்டது. மேலும், ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நடைமுறைகளை நிறுத்திவைத்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

2015 (மேல் முறையீடு)

ஜெயலலிதா மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க சிறப்பு அமர்வு நியமிக்கப்பட்டுள்ளது. சிறப்பு அமர்வில் உயர் நீதிமன்ற நீதிபதியாக குமாரசாமி நியமிக்கப்பட்டார். இந்த அறிவிப்பை கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி வகேலா அறிவித்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் 02 ஜனவரி 2015 அன்று விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு வழக்கில் தம்மையும் இணைக்க வேண்டுமென தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜனவரி 3, 2015 அன்று மனுத் தாக்கல் செய்தார்.

மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானி சிங் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் மதன் லோகூர், பானுமதி ஆகியோர் மாறுபாடான நிலை எடுத்ததால் மதன் லோகூர் இவ்வழக்கு பேரமர்வுக்கு மாற்றப்படுவதாக கூறினார் ஜெயலலிதாவின் பிணையை மே 12 வரை உயர் நீதிமன்றம் நீடித்தது. தீர்ப்பு வழங்கவும் மே 12 வரை தேதியை நீடித்தது. தலைமை நீதிபதி தத்து எ. கே. மிஸ்ரா அடங்கிய அமர்வு அரசு வழக்கறிஞராக பவானி சிங் நியமிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு பேரமர்வுக்கு மாற்றப்பட்டதால் அதைக் கருத்தில் கொண்டு கர்நாடக தலைமை நீதிபதி தீர்ப்பு வழங்கும் தேதியை மேலும் நீடிக்கவும் அனுமதி வழங்கியது.

மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானி சிங் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை தீபக் மிசுரா, ஆர் கே அகர்வால், பி சி பண்ட் அடங்கிய அமர்வு ஏப்பிரல் 21 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு (3 நீதிபதிகள் உடையது) பவானி சிங் அரசு வழக்கறிஞராக வாதாடியது தவறு, சட்டத்திற்கு புறம்பானது என்றும், அதற்காக மீண்டும் வாதத்தை முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டியதில்லை என்றும் இவ்வழக்கில் ஏப்பிரல் 27நம் தேதி இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தது. இறுதி தீர்ப்பில் மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு பவானி சிங் அரசு வழக்கறிஞராக வாதாடியது தவறு என்றும் அதற்காக மீண்டும் வாதத்தை முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டியதில்லை என்றும் தீர்ப்பு வழங்கினர். சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது தமிழக அரசால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் பவானிசிங் ஆவார். இவரே அரசு சார்பாக வாதிட்டார்.

பவானி சிங் மேல் முறையீட்டு மனுவில் அரசு சார்பாக வாதாடுவது தவறு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததால், கர்நாடக அரசின் சார்பில் வழக்கறிஞர் ஆச்சார்யா தனது வாதத்தை எழுத்து மூலமாக தெரிவித்தார். கர்நாடக அரசு இவ்வழக்கில் தன் சார்பாக (அரசு சார்பாக) வாதாடுவார் என தெரிவித்தது. இவர் முன்னமே கர்நாடக அரசு வழக்கறிஞராக இவ்வழக்கில் தோன்றியுள்ளார், 2012இல் ஆச்சாரியா அரசு வழக்கறிஞர் பதவியில் இருந்து விலகிக்கொண்டார். 2013 பிப்ரவரி அன்று ஆச்சாரியாவுக்கு பதிலாக பவானி சிங்கை கர்நாடக அரசு அரசு வழக்கறிஞராக அமர்த்தியது.

மேல் முறையீட்டில் நீதிபதி குமாரசாமி ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டை அரசு தரப்பு வழக்கறிஞர் நிரூபிக்கவில்லை எனக்கூறி விடுதலை செய்தார்.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

23 ஜூன் 2015 ஜெயலலிதா உள்ளிட்டோர் மீது தொடுக்கப்பட்டிருந்த வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை, கர்நாடக அரசு இந்திய உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. 16 ஜூலை 2015: ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.   

27 ஜூலை 2015: கர்நாடக அரசு மற்றும் திமுக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் மூன்று வாரங்களுக்குள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியது. இந்த வழக்கு நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ், அமித்தவ ராய் அடங்கிய அமர்வு முன் விசாரிக்கப்பட்டு கடந்த ஜூன் 7ம் தேதி தீர்ப்பை ஒத்திவைக்கப்பட்டு, இன்று 14-02-2017 காலை 10.30 க்கு தீர்ப்பு வழங்கப்பட்டது.

C.P.சரவணன், வழக்கறிஞர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com