சென்னை: அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்த கடிதம் ஆளுநரிடம் வழங்கப்பட உள்ளது.
அதிமுக பொதுச் செயலர் சசிகலா தலைமையில், கூவத்தூரில் நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
விரைவில் ஆளுநரை சந்தித்து இந்த கடிதத்தை அளிக்க இருப்பதாகவும், அவர் தமிழகத்தில் ஆட்சியமைக்க உரிமை கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து தமிழகத்தின் 21வது முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது முதல்வராக இருக்கும் பன்னீர்செல்வம், ஏற்கனவே தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அடுத்த முதல்வர் கனவில் இருந்த அதிமுக பொதுச் செயலர் சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறை செல்ல உள்ள நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், எடப்பாடி பழனிச்சாமி, தமிழக முதல்வராக வாய்ப்பு அதிகரித்துள்ளது.
ஆனால், அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்கும்பட்சத்தில் அரசியல் பரபரப்பு இன்னும் சில நாட்கள் நீளும் என்று எதிர்பார்க்கலாம்.
மேலும், முதல்வராக உள்ள பன்னீர்செல்வத்தை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் அவரை நீக்கி சசிகலா அறிவித்துள்ளார். ஆனால், அந்த அதிகாரம் சசிகலாவுக்கு இல்லை என்று பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரிய கடிதம் ஆளுநருக்கு வழங்கப்பட்டுவிட்டது. அவரது அழைப்புக்காக எதிர்நோக்கியுள்ளோம் என்று சட்டமன்றக்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.