தமிழக முதல்வர் பிரச்னையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுகிறார் என, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
கடந்த 2010-ஆம் ஆண்டு, பெண்கள் குறித்து அவதூராகக் கருத்து தெரிவித்தாகக் கூறி திரைப்பட நடிகர் ஜெயராமின் வீடு தாக்கப்பட்ட வழக்கு விசாரணைக்காக சீமான், திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரானார். இதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை ஏப்ரல் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: சசிகலாவுக்கு எம்எல்ஏ-க்களின் முழு ஆதரவு இருந்தால் அவர்களை ஒரே இடத்தில் ஏன் அடைத்து வைத்திருக்க வேண்டும். தாங்கள் அடைத்து வைக்கப்படவில்லை எனக் கூறும் எம்எல்ஏ-க்கள், மக்களின் அடிப்படை தேவைகளைக்கூட கவனிக்காமலும், தொகுதி பக்கம் செல்லாமலும் ஏன் இங்கு தங்கியுள்ளனர். அதிமுக உள்கட்சி விவகாரத்தில் தமிழக ஆளுநர் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுகிறார். அவரது தாமதத்தில் எவ்வித தவறும் இல்லை என்றார்.