நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவை சட்டமாக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கும் அளிக்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் மசோதாவை மத்திய அரசு இன்னும் சட்ட வடிவமாக்கவில்லை. நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி தேதியும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாமா அல்லது தேர்வு ரத்து என்ற அறிவிப்பு வெளியாகுமா என்ற சந்தேகத்துடன் மாணவர்கள் காத்திருக்கின்றனர். தமிழகத்தில் தற்போது நிலவும் அசாதாரண அரசியல் சூழலில், இந்த மசோதாவைச் சட்டமாக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்டனம்: அரசியல் நிகழ்வுகள் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கை மற்றும் ஊடக நிருபர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது. ஜனநாயகத்தில் ஊடகங்களின் பணி இன்றியமையாதது. பத்திரிகையாளர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுப்பதற்கு தமிழக காவல் துறை தொடர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேலும், தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.