நீதிமன்ற நேரம் வீணடிப்பு: மனுதாரருக்கு ரூ.10,000 அபராதம்
தேர்வு நடவடிக்கைகளை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவருக்கு, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில், தொழில்நுட்ப உதவியாளர், பயிற்சியாளர், சுருக்கெழுத்தர் மற்றும் தட்டச்சர் உள்பட, 2 ஆயிரத்து 175 பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பாணை, 2015-ஆம் ஆண்டு பிப்ரவரியில் 28, 29 ஆகிய இரு தேதிகளில் வெளியிடப்பட்டது.
இந்தத் தேர்வு நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி சென்னை மூலக்கடை லெபனாபுரத்தைச் சேர்ந்த டி.செந்தில்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மேலும் அவர் தனது மனுவில், எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வுப் பட்டியலை இறுதி செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு பிறப்பித்த உத்தரவு வருமாறு:
இந்தத் தேர்வு நடவடிக்கைகளில் மனுதாரர் பங்கேற்வில்லை. இருப்பினும், இந்த வழக்கை அவர் தொடர்ந்திருப்பது நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதைப் போன்றது. எனவே மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்தத் தொகையை தமிழ்நாடு சமரச தீர்வு மையத்தில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.